சபாஷ் மாப்பிளை!! சைக்கிளிலேயே கேரளா சென்று காதலியை கரம் பிடித்த கோயம்புத்தூர் பொறியாளர் ..!!

சைக்கிளில் கேரளா சென்று பெண்ணை தூக்கிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை…

உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையிலிருந்து கேரளா வரை சைக்கிளிலேயே பயணம் செய்து மணப்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞரின் செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா(28). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும் ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்தை நேற்று கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிவசூர்யா தனது திருமணத்திற்கு கார், வேன் என வாகனத்தில் செல்லாமல் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். கோவையிலிருந்து குருவாயூர் வரை சைக்கிளிலேயே செல்ல திட்டமிட்ட அவர், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து சனிக்கிழமை மாலை சென்றடைந்தார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குருவாயூர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது.

உடல் ஆரோக்கியத்தில் பொது மக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் முடிந்த வரை சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் வீடியோவும் வெளியிட்டுள்ளனர்.