விளையாட்டு களத்தில் மோதி கொண்ட விராட் கோலி – காம்பீர்… நடந்தது என்ன..?

பிஎல் கிரிக்கெட் போட்டியில் கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலியிடையே நேற்று நடந்த மோதல் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியிடம் கவுதம் காம்பீர் கூறியது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டபோது, கோலியின் கையை பிடித்து நவீன் முறுக்கியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. நேற்று நடந்த மேட்ச் மற்றும் ரிசல்ட்டை விட விராட் கோலி – கவுதம் காம்பீர், விராட் கோலி – நவீன் உல் ஹக் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் தான் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

லக்னோ அணியின் பேட்டிங்கின்போது 17 ஆவது ஓவரில்தான் இந்த மோதலுக்கான தொடக்கம் ஏற்பட்டது. அந்த ஓவரின் கடைசி பந்தை பெங்களூரு அணியின் சிராஜ் வீச அதை நவீன் எதிர்கொண்டபோது நடுவர் நோ பால் வழங்கினார். இதை எதிர்த்து பெங்களூரு அணி அப்பீல் செய்த பின்னரும் நோ பால் அளிக்கப்பட்டது. அப்போது, நவீன் மற்றும் கோலி இடையே மோதல் ஏற்பட்டு ஷூவில் இருந்த தூசியை வீசி நவீனைப் பார்த்து கோலி சில வார்த்தைகளைக் கூறினார். ஆட்டம் முடிந்த பின்னர் நவீனிடம் விராட் கோலி ஏதோ சில வார்த்தைகளை சொல்ல, நவீன் கோலியின் கையை பிடித்து முறுக்குவது போன்று செய்கிறார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த நிலையில் கோலியுடனான மோதலின்போது கவுதம் காம்பீர் என்ன கூறினார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஆட்டம் முடிந்த பின்னர் லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் விராட் கோலியிடம் சென்று எதற்காக எங்களை திட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு விராட் கோலி என்னை பார்த்து எதற்கு முறைக்கிறாய் என்று கேட்க, இதை கவனித்த லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்,என்ன கூறினாய் என்று கோலியிடம் கேட்டாராம். இதற்கு கோலி, உங்களைப் பற்றி நான் ஏதும் பேசவில்லை. எதற்காக தலையிடுகிறீர்கள் என்று கேட்க, அதற்கு கவுதம் காம்பீர் நீ எனது அணி வீரரை திட்டினால் அது என் குடும்பத்தை திட்டுவதைப் போன்றது என்று பதில் அளித்தாராம். இதற்கு பதில் கூறிய கோலி, அப்படியென்றால் உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறாக அவர்களுக்கு இடையே உரையாடல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.