கணவரின் குடிப்பழக்கத்ததால் நேர்ந்த சோகம்… மனைவி தீக்குளித்து தற்கொலை..

கோவை: விருதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 44). அவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள்
உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் கோவை சூலூர் வந்தனர். பின்னர் கள்ளப்பாளையம்
பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன்-மனைவி இருவரும் ஒரு ஓட்டலில் வேலை
செய்து வந்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால்
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று
ராமகிருஷ்ணன் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது சரண்யா, ராமகிருஷ்ணனை கண்டித்து சத்தம் போட்டார். இதனால்
மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் சரண்யா மனவேதனை
அடைந்தார்.

திடீரென விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில்
ஊற்றி தீவைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. அவர் வலி
தாங்கமுடியாமல் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்
பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீ அணைத்து சரண்யா மீட்டனர்
பின்னர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து
சென்றனர். ஆனால் ஆங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.