அதிமுகவின் உட்கட்சி அரசியல் உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது.. அதிலும் மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் அதிரடிப் போர்க்கொடியும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் திருப்பங்களும், கட்சியில் பரபரப்பை தினந்தோறும் தந்து கொண்டிருக்கிறது..
நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி மீது தாறுமாறான விமர்சனத்தை சிவி சண்முகம் முன்வைத்துள்ளார்.. இதனை அதிமுக எப்படி கையாள போகிறது? என்ன நடக்கிறது கட்சிக்குள்?
தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர் சரிவுகளையும், கட்சியின் தற்போதைய பலவீனங்களையும் முன்வைத்து திண்டிவனத்தில் நேற்று செய்தியாளர்கள சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாகச் சாடினார்.
கட்சியின் தோல்விக்கான காரணத்தை அடிமட்டத் தொண்டர்கள் வரை உணர்ந்திருந்தும், பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்னும் கனவுலகில் தான் இருக்கிறார்” என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடிக்குள்ளும், பணம் கொடுப்பவர்களின் கட்டுப்பாட்டிலும் சிக்கியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமியைப் பின்வாசல் வழியாக அரசியலுக்குள் கொண்டு வர நாடகமாடுவதாகவும், கட்சியின் செயற்குழுவைக் கூட்ட அஞ்சுவது ஏன் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, “செயற்குழுவைக் கூட்டவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்” என மிகக் காட்டமான எச்சரிக்கையையும் விடுத்தார்.
அதிமுகவில் கடந்த 3 வாரங்களாக அமைதியாக இருந்த சி.வி.சண்முகம் திடீரென இவ்வளவு உக்ரமான விமர்சனங்களை முன்வைப்பதற்குக் காரணங்கள் என்னவென்று அரசியல் விமர்சகர்கள் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமியின் தனிச்சார்பு முடிவுகளும், வாரிசை முன்னிறுத்தும் திட்டமும் சண்முகத்தை அதிருப்தியின் உச்சத்துக்கே தள்ளியுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, கட்சியை விட்டு விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் எத்தகைய வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதே ஸ்கிரிப்டை அப்படியே ஒத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனை தவிர, வன்னியர் சமூக மக்களால் தான் அதிமுக 31 தொகுதிகளில் வென்றது என்ற அவரது பகீர் கருத்தும், ஏற்கனவே அவரது மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டிருந்த சூழலும் இந்த வெடிப்புக்கு முக்கியக் காரணி என்றும் சொல்கிறார்கள்.. கட்சித் தலைமை தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கட்டும் என்பதற்காகவே அவர் இபிஎஸ்ஸை நேரடியாக எதிர்க்கிறார் என்றும், அப்படி நீக்கப்பட்டால் சுயேச்சையாக மாறி மிக எளிதாக முதலமைச்சர் விஜய்யின் தவெகவில் இணைவதற்கு சண்முகம் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் ஒரு வலுவான கருத்து நிலவுகிறது.
சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் கொந்தளிப்பால் ஆடிப்போயுள்ள அதிமுக தலைமை, அவரை தற்காலிகமாக சமாதானம் செய்யும் மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உடனடியாக இறங்கியுள்ளதாம்.அதனால்தான், எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாயிலாக ஒரு முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய உட்கட்சி விஷயங்களைப் பொதுவெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல, திட்டமிட்டு அதிமுகவைச் சிதைக்க நினைக்கும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் அநாகரிகத்தைத் தடுக்க வேண்டிய இந்த நேரத்தில், கட்சியின் மூத்த தலைவரான சண்முகமே இவ்வாறு கண்ணியமின்றிப் பேசுவது முறையல்ல, இது சண்முகத்தின் மீதான குற்றச்சாட்டு அல்ல, மாறாக ஒரு தொண்டனின் மனக்குமுறல், விஜய் ஆட்சி குறித்து மக்களுக்கு நிழல் எது நிஜம் எது என்று தெரிய வந்துள்ளது, இபிஎஸ் தலைமையில் புதிய சரித்திரம் படைப்போம் என்றெல்லாம் உதயகுமார் அதில் பதிவிட்டுள்ளார்.ஆனால் சி.வி.சண்முகம் சமாதானம் ஆவாரா தெரியவில்லை.. எடப்பாடி பழனிசாமியை நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் சண்முகம் தாக்கிப் பேசியுள்ளதால், இந்தச் சமரச அறிக்கையை ஏற்றுக்கொண்டு அமைதியாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். வாரிசு அரசியல் குற்றச்சாட்டைப் பகிரங்கப்படுத்திய பிறகு, சண்முகம் பின்வாங்கினால் அது அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், அவர் தனது தற்போதைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நீடிக்கக்கூடும் என்றும் கருத்து கூறுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு உதயகுமார் போன்ற பிற சமூக மூத்த தலைவர்கள் மூலம் சண்முகத்தின் வாதங்களை முறியடிக்க முயன்றாலும், சண்முகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் பிற அதிருப்தியாளர்கள் ஒன்றிணைவதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவே தெரிகிறது..
சிவி சண்முகம் தொடர்ந்து இதே பாணியில் போர்க்கொடி தூக்கினால், கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கும் இறுதி முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி நகர வேண்டிய சூழல் உருவாகலாம். அதிமுகவில் பெரும் மாற்றங்களை ஏற்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.







