கோவையில் வெவ்வேறு சாலை விபத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் பலி..

கோவை : திருப்பூர் மாவட்டம் , பூலாங்கிணறு பக்கம் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் சின்ன கஞ்சிமலை. இவரது மகன் செந்தில் (வயது 38) இவர் நேற்று உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவரது மொபட் மீது மோதியது .இதில் செந்தில் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் யாக்கோபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், காந்தி சதுக்கத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ரமேஷ் குமார் (வயது 22)இவர் நேற்று அறிவொளி நகர் கிருஷ்ணா கல்லூரி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  மாநகராட்சி குப்பைத்தொட்டி மீது பைக் மோதியது .இதில் ரமேஷ் குமார் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ரவிக்குமார் மதுக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல சூலூர், அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சரோஜினி ( வயது 34 )நேற்று இவர் பெரன்னே கவுண்டன் புதூர் மாரியம்மன் கோவில் ரோட்டில் ஸ்கூட்டி ஒட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவரது ஸ்கூட்டி மீது மோதியது .இதில் சரோஜினி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் நித்யாவழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.