நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன்(வயது36). இவருக்கு திவ்யா(28) என்ற மனைவியும், சஞ்சய்பிரதீப், ஆத்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். பிரவீன் தற்போது அவினாசி கைகாட்டி புதூரில் குடும்பத்தினருடன் வசித்து கம்யூட்டர் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊட்டியில் பிரவீனின் உறவினர் வீட்டில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினரை ஊட்டிக்கு அழைத்து செல்லுமாறு அவர் தனது சகோதரரிடம் கூறியிருந்தார். அதன்படி சம்பவத்தன்று, சுதாகர் தனது காரில் மனைவி பானுபிரியா(36), மாமியார் வசந்தி(57) மற்றும் பிரவீனின் மனைவி திவ்யா, தாய் ரத்தினம், குழந்தை ஆத்யா உள்ளிட்ட 5 பேரையும் அழைத்துக்கொண்டு சென்றார். காரை சுதாகர் ஓட்டினார்.
பிறந்தநாள் விழா முடிந்து மீண்டும் நள்ளிரவு அனைவரும் ஒரே காரில் ஊட்டியில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் வழியாக அவினாசி நோக்கி வந்தனர். அன்னூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் கார் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை ஆத்யா இறந்தாள். திவ்யா சிகிச்சை பலனின்றி மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply