ஜி.பி.எஸ். மூலம் வசூலிக்கும் முறை டோல்கேட்டில் அறிமுகம்: நிதின் கட்காரி…

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச் சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா) அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் என்று இருந்தது. பின்னர் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் பீக் ஹவர்ஸ் சமயங்களில் சுங்கச் சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.