குரங்கம்மை தொற்று அறிகுறி..? புனே அனுப்பப்படும் புதுக்கோட்டை நபரின் ரத்த மாதிரிகள்..

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயது உடைய ஒருவருக்குக் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தவரைச் சோதனை செய்து பார்த்தபோது அறிகுறி இருந்தது தெரிய வந்தது தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கிருந்து தப்பித்த அந்த நபர், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டைச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை கண்டுபிடித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், அவருடைய வீட்டிலிருந்த நான்கு பேரையும் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருடைய ரத்த மாதிரிகள் இன்று புனேவிற்கு மருத்துவ சோதனைகளுக்காக அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.