ஏசியாநெட் செய்தி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து எஸ்எஃப்ஐ மிரட்டல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்..!

கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியாநெட் செய்தி நிறுவனம், கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவி இருப்பது தொடர்பாக செய்தி வெளியிட்டது.

அதில், 9 வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவன் தனக்கு போதை மருந்து தந்ததாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தன் பள்ளியில் படிக்கும் பல மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது போலிச் செய்தி என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்எஃப்ஐ) சேர்ந்த 30 பேர், கொச்சியில் ஏசியாநெட் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, செய்தியாளர்களை மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதுமுள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேற்று கோழிக்கோடில் உள்ள ஏசியாநெட் அலுவலகத்தில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. போலிச் செய்திகள் வெளியிடுவதாக ஏசியாநெட் மீது சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.