கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சைக்கு அனுமதி: ஜெனரேட்டர் வேலை செய்யாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்- அன்னூர் அரசு ஆஸ்பத்திரியின் அவல நிலை ..!

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23).
இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னேஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்காக ஏற்பாடுகளை ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் அங்கிருந்து குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது மின் வேட்டு ஏற்பட்டு இருந்தால் அந்த கர்ப்பினியின் நிலை என்னவாயிருக்கும் என பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ தேவைகளை உடனே அரசு செய்யவேண்டும். மின்வேட்டு ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரியை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.