கோவை மாநகரில் தேங்கிய குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு.!!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தேங்கிய குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் தினமும் 1000 டன் குப்பை சேகரமாகின்றன. இவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொண்டு போய் கொட்டப்படுகின்றன.

குப்பை சேகரிக்க வசதியாக மாநகரில் சாலையோரங்கள், குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. தொட்டிகள் நிறையும் போது, வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வாகனங்கள் மூலமாக மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக மாநகரில் சில இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்து உள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்:-

சிவானந்தா காலனி, ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், கணபதி, சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி, குனியமுத்தூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் விரைவில் நிரம்பி விடுகின்றன. இவற்றை அவ்வப் போது தொட்டிகளில் இருந்து குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவதில்லை. இதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொட்டிகளில் குப்பைகளைத் தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.