வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ள சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 261 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உணவக உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதிகமான வாடிக்கையாளர்கள் வந்த நிலையில், குறைந்த வாடிக்கையாளர்கள் வருவதாகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மத்திய அரசு விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒருசில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பரோட்டா 5 ரூபாய் உயர்ந்துள்ளது. பரோட்டா விலை ரூபாய் 25 ஆகியுள்ளது.









