ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை

கோவை மாநகராட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.) உரிய தகவல்கள் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சௌரிபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன் அளித்த மனுவில் கூறும்போது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில் பொது தகவல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், பிரதான பொது தகவல் அலுவலர், மாமன்ற செயலாளர் மற்றும் சட்ட அலுவலர் ஆகியோர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கும் மனுக்களுக்கு, 30 நாள்களுக்குள் தகவல்கள், ஆவணங்களை வழங்குவதில்லை. கோப்புகளைப் பார்வையிடவும் அனுமதிப்பதில்லை. மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் துணை ஆணையர் ஷர்மிளாவிடம் முறையீடு செய்தாலும், 45 நாள்களுக்குள் தகவல் வழங்கப்படாமல் வருடக் கணக்கில் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.