திருச்செந்தூர் கோவில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு – அக்.4ம் தேதி போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு.!!

தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன.
நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுகாதார வசதிகளை பேணுவதற்கு மிகுந்த சிரமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பக்தர்கள் ஆங்காங்கே விட்டுச் செல்லும் பல்வேறு கழிவு பொருட்கள் மற்றும் கோவிலில் இருந்து வரும் கழிவு பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொண்டு சென்று தரம் பிரிக்காமல், ஆறுமுகநேரி அருகே உள்ள இராணிமகாராஜபுரம் கிராம பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதை தரம் பிரித்து தேவையற்ற கழிவுகளை தீயிட்டு அழிப்பதால், அதன் மூலம் வெளியேறும் புகை மண்டலம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சு திணறல், நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் உருவாகி பாதிக்கப்படுகின்றன.
இதை முறைப்படுத்த வேண்டும் என்று இராணிமகாராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் தலைமை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு ஆணையம், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தினர் தங்கள் ஊர் பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருவதை கண்டித்து அக்டோபர் 4ம் தேதி திருச்செந்தூர் பிரதான சாலையில் இராணிமகாராஜபுரம் ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் ரெங்கநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக அருகில் உள்ள ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால், திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.