குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..

 

கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட தமிழக அரசின் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டத்தில் மானிய உதவி பெற்று தொழிலை சீரமைக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21, 2021-22 நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன மயமாக்குதலுக்காகவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் கூடுதல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு “கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் புதிதாக நிறுவியுள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மதிப்பில் 25% (அதிகபட்சம் 25 லட்சம்) மானியமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தில் பயன்பெற 23/03/2020 க்கு பின்னர் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்களது நிறுவனத்தை நவீனமயமாக்கல் அல்லது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டும் தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் எப்பகுதியிலும் அமைந்துள்ள அனைத்து விதமான உற்பத்தி தொழில் நடவடிக்கையும் மேற்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்தவையாக கருதப்படும் எனவும் இத்திட்டம் ஓராண்டு (2022-2023) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தகுதி உடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.