தோப்புக்குள் புகுந்த ராஜ நாகம்: கோவையில் பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் பிடிபட்ட 9 அடி நீள ராஜநாகத்தை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சியானது அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இந்த வனப்பகுதிகளில் யானை,மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றனர்.வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடும் சூழல் உள்ளது.

இந்நிலையில் இன்று நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாக்குத்தோப்பில் ராஜநாகம் ஒன்று உள்ளதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள அரிய வகை ராஜநாகத்தை லாவகமாக மீட்டனர்.இந்த ராஜநாகமானது ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் மட்டுமே வசிக்க கூடியவை.அதிக விஷத்தன்மை கொண்டவை.இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும்,ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.

பின்னர்,அதனை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லித்துறை அடர்வனப்பகுதியில் ஈரப்பதம் அதிகமுள்ள இடத்தில் பத்திரமாக விடுத்தனர்.

ஊருக்குள் புகுந்த அரிய வகை ராஜநாகத்தை மீட்டு அடர் வனப்பகுதிக்குள் விடுவித்ததால் அப்பகுதிமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.