திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்த சுயேட்சை வேட்பாளர்.!!

திருச்சியில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பத்து ரூபாய் நாணயங்களாக 25,000 ரூபாய் கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளானது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். டெபாசிட் தொகை 25,000 ரூபாய் முழுவதும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும் என்று எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு சில கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடங்களில் சண்டை சச்சரவுகளும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். வேட்பாளர் கொண்டு வந்த 10 ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு அதிகாரிகள் சிரமம் அடைந்தனர்.