கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள சூலூர் அய்யாவுதேவர் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஸ்ரீஜித்( வயது 33) இவரது தந்தை ராதாகிருஷ்ணன் ( வயது 66) தாயார் பூங்கொடி ( வயது 53) ஆகியோர் அப்பகுதியில் உள்ள திருமூர்த்தி பிள்ளை வீதியில் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீஜித்தும் அவரது தம்பி சரத்தும் தினமும் காலையில் சென்று பெற்றோர்களை பார்த்து வருவது வழக்கம். இவர்களது தந்தை ராதாகிருஷ்ணன் கடன் பிரச்சனையால் தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்று அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீ ஜித்தின் தம்பி சரத் வழக்கம் போல் பெற்றோர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவரது தந்தை நைலான் கயிற்றிலும் மற்றும் தாய் சேலையிலும் படுக்கை அறையில் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி எழுதி வைத்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடன் தொல்லையால் கணவன் -மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..