காதலி வீட்டில் காதலன் தூக்கு போட்டு தற்கொலை-காதலியும் தற்கொலை முயற்சி..

கோவை: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒ.வி.எச். சாலையை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மகன் பிரதீப் (வயது 26) இவர் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்து விட்டு மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கூடலூரைச் சேர்ந்தவர் காவியா (வயது 26) இவர் பிரதீப்பின் பள்ளிக்கூட தோழி ஆவார். இவர்கள் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். காவியா கோவை சரவணம்பட்டி, நேரு நகர் 3-வது வீதியில் கடந்த 2 மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்த பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வருகிற 8 -ந் தேதி காவியாவின் பிறந்தநாள். எனவே காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பிரதீப் கடந்த 27ஆம் தேதி காவியாவின் வீட்டிற்கு வந்து தங்கினார்.. இந்த நிலையில் நேற்று காலை காவியா தனது தாயிடம் பேசுவதற்காக வீட்டில் மாடிக்கு சென்றார். பின்னர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது பிரதீப் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவியா கதறி அழுதார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் பிரதீப் உடலை கீழே இறக்கினார்கள்.அதற்குள் பிரதீப் இறந்து விட்டார்.’இதனால் மன வேதனை அடைந்த காவியா வீட்டுக்குள் ஓடிச் சென்று தானும் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் காவியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சரவணம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..