வீட்டின் சுவர் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் காயம்..!

கோவை தடாகம் பகுதியில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அன்னூர் அடுத்த நாரணாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் தடாகம் நோக்கி சென்றது . அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நாரணாபுரம் ஏ.டி காலனி பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மூதாட்டி வேலாத்தாள் மற்றும் அவரது மருமகள் ராமாத்தாள், மகன் செல்வம், பேரன்கள் நிஷாந்த், ஜீவன்த் மற்றும் லாரியை ஓட்டி வந்த தனசேகர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சுவர்கள் இடிந்து வீடு முற்றிலும் சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.