நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்ததால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து தவெகவிற்கு இடதுசாரிகள் கட்சிகள், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்த நிலையில் கடந்த மாதம் மே 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்றதில் இருந்து அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தங்களது களப்பணிகளை தவெக அரசு செவ்வனே செய்து வருகிறது.
முதலமைச்சர் விஜய் பதவி ஏற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் அதிரடியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரின் செயல்பாடுகளில் சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன.
பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் (500 மீட்டர் சுற்றளவுக்குள்) அமைந்துள்ள 717 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார். இந்த கடைகளில் 276 கோவில்கள்/வழிபாட்டுத் தலங்கள் அருகிலும், 186 கல்வி நிலையங்கள் அருகிலும், 255 பேருந்து நிலையங்கள் அருகிலும் செயல்பட்டு வந்தவை ஆகும். இதில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 290 கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, பதவியேற்றவுடன் முதல்வர் விஜய் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
அதனைதொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எந்தெந்த மாவட்டங்களில் மொத்தம் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன என்பது குறித்த முழு விவரங்கள் (கடை எண், மாவட்டம் மற்றும் பகுதி) அடங்கிய பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்கு நேரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக கடந்த ஜூன் 9-ம்தேதி சிங்கப்பெண் பாதுகாப்பு படையை தொடங்கி வைத்தார். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களின் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள பிரத்யேகக் காவல் பிரிவாகும்.
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘சிறப்பு போதைப்பொருள் தடுப்பு படை’ மற்றும் மாநிலம் முழுவதும் 65 புதிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் நிலையங்கள் (Anti-Narcotic Task Force) அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளுக்கு பொது இடங்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது கட்சியான தவெக (TVK) தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பொதுமக்கள் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு பல்வேறு அதிரடி மற்றும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத ஒரு புதிய முயற்சியாக, வரலாற்றில் முதன்முறையாக, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் முதல் முறையாக அனைத்து அமைச்சர்களின் செல்போன் எண்களும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் முதல் ஒட்டுமொத்த அமைச்சர்களின் சொந்த அலைபேசி எண்களும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களும் அரசு இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு ஓப்பனா ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, அமைச்சர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்கள் மற்றும் அலுவல் மின்னஞ்சல்களுடன் இப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது தவெக ஆட்சியின் வெளிப்படைத்தன்மையை நோக்கிய முக்கியமான படியாக கருதப்படுகிறது. மனுக்களை நேரடியாக கொடுக்க முடியாத மக்கள் இந்த மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் https://www.tn.gov.in/minister_list.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, அனைத்து அமைச்சர்களின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.









