சீனாவில் இருந்து விமானத்தில் கோவைக்கு வந்த பயணிக்கு கொரோனா உறுதி ..!

கோவை:-
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவை விமானநிலையத்தில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை இல்லை.
இருந்தபோதிலும் சீனாவில் இருந்த சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவை விமானநிலையம் வரலாம். அவ்வாறு சீனாவில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது.
மேலும் இவருக்கு எந்தவகையான கொரோன என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் அவருடன் கோவை வந்த விமான பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த விமானத்தில் வந்த கோவை பயணிகளையும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.