சிறுமுகை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். யானையில் உடலை வன அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆனால் யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லை. இந்த ஆண் யானை எப்படி இறந்தது என்பதை கண்டு பிடிப்பதற்காக இன்று உடற்கூறாய்வு பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.