தச்சு தொழிலாளி அடித்துக் கொடூர கொலை – மைத்துனர் வெறிச்செயல்..!

கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60). இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர். செல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தச்சு வேலை செய்து வந்தார்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் குடிபோதையில் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனது சகோதரர் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதாக தங்கமாரி சகோதரி செல்வியிடம் கூறி வேதனைபட்டார். அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம், இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சகோதரருக்கு வேலையே கிடையாது. எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வருகிறார் என கேட்டார். அதற்கு அவர்கள், பாலசுப்பிரமணியத்தை திட்டியுள்ளனர்.
இதனால் பாலசுப்பிரமணியத்திற்கு, மணிகண்டன் மீது கோபம் உண்டானது. நேற்று இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு நெற்றி, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் தீராத பாலசுப்பிரமணியம் இரும்பு கம்பியால் மேலும் அடித்தார். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து திருவள்ளுவர் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்டு, உனது தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்து கொள் என்று கூறினார். இதை கேட்டு பதறிப்போன அவர் தனது தாயுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகனின் உடலை பார்த்து வேலம்மாள் கதறி அழுதார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.