கள்ளகாதலால் பறிபோன வாழ்க்கை… கணவன்-மனைவிக்கு இடையே தகராறு:தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை..!

கோவை மாவட்டம் காரமடை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாபு (வயது 42). கூலி
தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவன்-மனைவி ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது
கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இது நாளடைவில் அவரது மனைவிக்கு
தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
வந்தது.
இதனால் இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாபுவை பிரிந்து தனியாக
சென்றார். சம்பவத்தன்று அவரது மனைவி, பாபுவின் வீட்டின் அருகே சென்றார்.
அப்போது பாபுவிற்கும் அரவது மனைவிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதனை பார்த்த பாபுவின் தாயார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தார்.
அப்போது பாபு கோபித்து கொண்டு வீட்டிற்குள் சென்றார். அதன் பின்னர் அவர்
வெகு நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு பாபு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்க வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.