உடல் மெலிந்த நிலையில் தண்ணீர் குடிக்க கஷ்டப்பட்டு வரும் ஆண் காட்டு யானை- சிகிச்சை அளிக்க வனத்துறைக்கு வேண்டுகோள்.!

கோவை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,
காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை,
காட்டுப்பன்றி, காட்டுமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர்
வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில்
நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு உணவு, தண்ணீர் உட்கொள்ள  முடியாமல்
அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் -குன்னூர் சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே உடல் மெலிந்த நிலையில் கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த யானை வந்துள்ளது. அப்போது அந்து வழியைச் சென்ற பொதுமக்கள் யானையைப் பார்த்தவுடன் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அதில் யானை தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அந்தக் காட்டு யானை கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வருவதாக
மக்கள் தெரிவித்தனர். தற்போது செல்போன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
யானையின் உடல் நிலை மிகவும் மெலிந்து காணப்படுகிறது. ஆனால் இதுவரை
வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்து வருவது
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து
தகுந்த சிகிச்சை அளித்து யானையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சமூக
வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.