கோவை காப்பகத்தில் இருந்து வடமாநில சிறுவர்கள் 3 பேர் தப்பி ஓட்டம்..!

கோவை ரயில் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் 3 சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த ரயில்வே ‘சைல்டு லைன்’ அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தபோது பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேரும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 15 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் 3 பேரையும் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். இதை அடுத்து சிறுவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் காப்பகத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 3 சிறுவர்களும் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.