என்னது!! ஒரு கிலோ அரிசி ரூ.350.. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி… அத்தியாவசிய பொருட்களுக்காக தவிக்கும் மக்கள்.!

பாகிஸ்தானில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களுக்கு பொது மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ஏறியுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு கிலோ அரிசி 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆரஞ்ச், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் விலையும் கிலோவிற்கு 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இறைச்சி வகைகளின் விலையில் விண்ணை முட்டுகிறது. பாகிஸ்தான் மக்களின் பிரதான உணவான, கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மானிய விலையில் பொது மக்களுக்கு அரசு கோதுமை மாவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

அரசு அமைத்துள்ள மையங்களில் கோதுமை மாவு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலால் அண்மையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மாவு வழங்கும் மையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கடுமையாக தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. காவல்துறை அதிகாரி ஒருவர், பொது மக்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்நிய செலாவணி இருப்பு மிகவும் குறைந்துள்ளதால் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கடன்களை வாங்கியே தனது நிதிநிலையை சரி செய்ததால் கடன் அளவும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக, ராணுவத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவ வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட சரியான முறையில் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உடனடியாக செயல்படாவிட்டதால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என கடந்த வாரம் உலக வங்கி எச்சரித்திருந்தது.