எழுந்திரும்மா… போகலாம்… மின்வேலியில் சிக்கி பலியான 3 யானைகள்.. தாய் உயிரிழந்ததை அறியாமல் எழுப்ப முயலும் குட்டிகள் நடத்திய பாசப் போராட்டம்..!

ருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.

ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா யானை ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மக்னாவுடன் தருமபுரியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது.

இதுதவிர, மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இவ்வாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலக்கோடு வனச்சரக பகுதியையொட்டி அச்சம் ஏற்படுத்தி வரும் யானைகள் வெளியேறாதபடி தடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனாலும், வனத்துறை சார்பில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன. யானைகள் மின்வேலியில் சிக்கிய தகவல் அறிந்த தருமபுரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட், தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உள்ளிட்டோர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாம் அமைத்தனர்.