காணும் பொங்கலை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த பார்வையாளர்கள்- நீரில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்!!

சத்தியமங்கலம் :  காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர்.
பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை முதலே பூங்காவிற்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பூங்காவிற்கு வந்து பொழுது போக்கினர்.
பூங்காவில் உள்ள அழகிய புல் தரைகளில் அமர்ந்து உணவு வகைகளை உண்டு ரசித்த பொதுமக்கள் பூங்காவில் உள்ள படகில் உற்சாகப் பயணம் மேற்கொண்டதோடு சிறுவர் ரயில், ஊஞ்சல் சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.  இதற்கிடையே பூங்காவில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் சிறுவர், சிறுமியர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்கா சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது.