கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் இன்று பொறுப்பேற்பு..!

கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனிடையே சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு வந்த விஜயகுமார் கோப்புகளில் கையெழுத்திட்டு கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கி மக்களை திருப்பதியாக வைத்திருப்பதே எங்கள் நோக்கமாக இருக்கும் என்று விஜயகுமார் தெரிவித்தார்.