வர்த்தக சிலிண்டருக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

தொழில்துறை, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கு ஆசியாவில் நிலவிய நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு சிலிண்டர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகம் 50 சதவீதம் அளவுக்குத் தளர்த்தப்பட்டு, தற்போதைய மேம்பட்ட விநியோகச் சூழலுக்கு ஏற்ப முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நெருக்கடியின் போது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி மேம்பட்டுள்ளதாலும், இறக்குமதி சீராக உள்ளதாலும் பெட்ரோகெமிக்கல் போன்ற பிற முக்கியத் துறைகளுக்கான மூலப்பொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்யும். திருத்தப்பட்ட விநியோக வழிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துமாறு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பு பெற்ற வணிக நுகர்வோர்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்துவர். மற்ற தகுதியுள்ள நுகர்வோர்களும் படிப்படியாகப் பிஎன்ஜி கட்டமைப்புக்கு மாற்றப்படுவர்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் மத்திய அரசின் கொள்கைக்கு இணங்க இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.