கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார் கலெக்டர் கிராந்தி குமார் பாடி..!

கோவை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன். எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன். இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருப்பேன். கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.