தொடர்ந்து மோசமாகி வரும் நித்தியானந்தாவின் உடல்நிலை.. மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம்..!

ந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும், மேலும் இவர் மீது ஆள் கடத்தல் நில ஆக்கிரமிப்பு என இன்னும் பல குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்து வருகிறது.

இந்தியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியதாகவும், தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும் என்றும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென்றும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக அவ்வபோது அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவாற்றி வருகிறார் நித்தியானந்தா.

முன்னதாக, கைலாசா அதிபர் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்தும், அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும் கூறி பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் இறந்துவிட்டதாகவே சிலர் நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவிட, உடனே அதை மறுக்கும் விதமாக, களத்தில் குதித்த நித்தியானந்த மிகவும் பலவீனமான நிலையில், தனது போட்டோவை வெளியிட்டார். ஆனால், அதே அறிவிப்பில், ‘தான் இன்னும் மரணிக்கவில்லை என்றும்.. ஆனால், சமாதியில் இருப்பதாகவும்’ தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில், கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக செய்திகள் பரவியது. இப்படியான செய்திகளை தன் ஞான கண்களால் அறிந்த நித்தி, திடீரென ஆன்லைன் வாயிலாக காட்சி தந்து இன்ப அதிர்ச்சியளிப்பார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் கோரி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு நித்தியானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உடனடியாக தனக்கு மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் தரவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

நித்தியானந்தா நீண்ட காலமாக சிறுநீரகப் பிரச்னையால் தவித்து வருவதாகவும், மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றமில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், தோல் சம்பந்தப்பட்ட சில தொற்றுநோய்களும் நித்தி உடலை ஆட்கொண்டதாக தெரிகிறது.

தேடி வரும் காவல்துறையினரிடம் சிக்காத நித்தி, தொற்றுநோயுடன் சிக்கி கொண்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம், பெரம்பை ஐஸ்வர்யா நகரில் உள்ள முருகன் கோயிலில் நித்யானந்தாவை சிவன் போல் சித்தரித்து கையில் சூலத்துடன் வைக்கப்பட்டுள்ள 18 அடி உயர சிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிலை சிவனின் அவதாரங்களுள் ஒன்றான கால பைரவர் சிலை என கோயில் தரப்பினர் முதலில் மழுப்பிய நிலையில், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் நித்தியானந்தாவின் தீவிர பக்தர் என்பது தொடர்ந்து கண்டறியப்பட்டது.