கோவையில் நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினிேயாகம்..!

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. வருகிற 8-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றே பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம். டோக்கன் வழங்கியதும் வருகிற 9-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த மாதம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.