வரத்து குறைவால் கோவையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு..!

கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.
மார்க்கெட்டிற்கு கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்
இருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு
பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.
பருவமழைக்கு முன்பு தினமும் கர்நாடகாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட
லாரிகளில் தக்காளிகள் கொண்டு வரப்படும். மழையால் 10 வண்டிகள் மட்டுமே
வருகிறது. அதில் 5 வண்டிகள் கேரளாவிற்கு சென்று விடுகிறது. இதனால் மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது விலை உயர்ந்து
காணப்படுகிறது. எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கிலோ ரூ.30க்கு விற்பனையாகி
வருகிறது.

டி.கே.மார்க்கெட்டுக்கு பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர்
உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வரும்.
தற்போது மழை காரணமாக வரத்து குறைந்து விட்டது. பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வருகிறது. வரத்து குறைவால் தக்காளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இது வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.