குறிச்சி அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள்- நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கோவை சுந்தராபுரம் – குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதர்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டும் ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடியேறாமல் உள்ளனர். 5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் மர்ம நபர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவறுக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இங்கு விபசாரமும் நடைபெறுவதாக சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது. புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புணரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.