பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் திடீர் மரணம்..

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், 7-வது மலையின் உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க, மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத்திற்காக, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மலை ஏறி சுயம்பு லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி காலையில், ஆலாந்துறை, காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சந்திரன்(வயது 56) என்பவர், தனது நண்பர்களுடன், பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.4வது மலை ஏறும் போது, சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், சந்திரனை கீழே துாக்கி வந்து பரிசோதனை செய்தனர். அதற்குள், சந்திரன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.