முபினின் நண்பர்கள் 2 பேரை போலீசார் ரகசிய கண்காணிப்பு- கோவையில் தொடரும் தீவிர சோதனை.!

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் கடந்த சில தினங்களாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த துணிக்கடை ஊழியரான முகமதுஹசன்(வயது29) உள்பட 3 பேர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கோவை பெரியகடைவீதி இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் முகமது ஹசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது சில மணி நேரங்கள் நீடித்தது. சோதனையின்போது, முகமது ஹசனிடமும் போலீசார் விசாரித்தனர். இவருக்கும், ஜமேஷா முபின் வெடிமருந்து பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்கள் 2 பேர் முகவரியை கண்டுபிடித்து, அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.