அரசுகளால் உருவாக்கபட்டது இல்லை இந்தியா… ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.!!

2047 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறினார்.

2014 வரை நாட்டில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் இன்று 70,000 நிறுவனங்கள் உருவாகியுள்ளதாகவும் கூறிய அவர், “அடிப்படை வசதிகள் , தொழில் துறை என பலதுறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 2047க்குள் பாரதம் உலக தலைவராக மாற வேண்டும்” என்றார்.மேலும், “இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது. அரசுகளால் உருவாக்கப்படவில்லை. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். இந்த இலக்கு ஒவ்வொரு இந்தியனின் ஒத்துழைப்புடன் தான் நடக்கும். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும், எல்லோருக்காகவும்” என்று தமிழில் கூறினார்.