கோவை மாநகரில் உள்ள போத்தனூர் காவல் நிலையம் மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற கோட்பாட்டை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், செயல்முறையிலும் உணர்த்தும் வகையில், இரு தம்பதியினருக்கு போத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பான சீர் செய்து வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. நிறை மாத கர்ப்பிணிகளை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வதற்காக
கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக் குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவல்துறை பணியாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், இரு தம்பதியினரும் மரியாதையுடன் அமர்த்தப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு பாரம்பரிய முறையில் பட்டு சேலை ,வேட்டி சட்டை பழங்கள்
வளையல்கள் அணிவித்து, நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்து மலர் தூவி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வு காவல் நிலைய வளாகத்தையே ஒரு குடும்ப விழா சூழலாக மாற்றியது.
மேலும், மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 16 வகையான பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு, அன்போடு வரவேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்தனர்.
போத்தனூர் காவல் நிலையம் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகி, குற்றங்களைத் தடுப்பதிலும், சாலை விபத்துகளை குறைப்பதிலும், வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், திறனாளிகளுடன் சமத்துவ பொங்கல் போன்ற சமூகநல நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும், இரவு பகல் பாராமல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
காவல் நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு









