கோவையில் காதலி பேச மறுத்ததால் விரக்தியில் காதலன் தூக்குபோட்டு தற்கொலை..!

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சம்பங்காளி. இவரது மகன் பிரதீப் (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை இல்லாம் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் நேரில் சந்தித்தும் செல்போனின் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நண்பர் வீட்டில் தனியாக இருந்த போது சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் தற்கொலை செய்து கொண்ட பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.