திருமணமாகாத பெண்ணிற்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

புதுடெல்லி: திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார்.

கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து அப்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவரது கருக்கலைப்புக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இந்நிலையில் அப்பெண் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் கந்த், ஏஎஸ் போப்பண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் மனமுவந்து உறவில் இருந்துள்ளார்.

இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு ஜூன் மாதம்தான் தெரியவந்துள்ளது. அப்போது அவரது கரு 22 வாரங்கள் வளர்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில் அவரது நண்பர் திடீரென திருமணத்துக்கு சம்மதமில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையிலேயே அப்பெண் கருக்கலைப்புக்கு அனுமதி கோரியுள்ளார். திருமண உறவைத் தாண்டி குழந்தை பெற்றுக் கொண்டால் அதனால் பல்வேறு சமூக நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டும். அதை எதிர்கொள்ள நான் தயாராக இல்லை என்று அப்பெண் காரணாம் கூறியுள்ளார்.

ஆனால், டெல்லி நீதிமன்றம் அவர் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி மறுத்துள்ளது. மனமொத்த உறவின் மூலம் உண்டாகும் கரு 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி கண்டிருந்தால் கலைக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மனுதாரர் திருமணமாகாதவர், அவர் ஒருமித்த சம்மதத்துடன் உறவு கொண்டு கர்ப்பமடைந்திருப்பதால் இது தொடர்பாக 2003 கருக்கலைப்பு சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை. எனவே கருக்கலைப்புக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது.

ஒரு பெண் திருமணமாகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்க முடியாது. இப்போது அந்தப் பெண்ணின் கரு 24 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு மனுதாரரை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கருக்கலைப்பால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாம்.

அவ்வாறு அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய இயலாத மருத்துவ நெருக்கடி ஏற்படின் அவர் பத்திரமாக குழந்தைப் பேறு செய்ய தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம். குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு குழந்தையை தேவையானோர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ள நாட்டில் ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது” என்று தெரிவித்தனர்