தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது – முதல்வர் ஸ்டாலின் பேட்டி..!

சென்னை: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என கூறி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் மோசமான நிலையில் உள்ளது. திமுகவின் தலைவர் என்ற முறையில் இந்த வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: ஒரு மாநில தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையையும் தீர்மானிக்க முடியாது. பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலம் குஜராத். குஜராத் தேர்தலில் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர். உள்ளூர் காரணிகளும் பாஜவுக்கு உதவியது. குஜராத்தில் வாக்காளர்கள் வாக்களித்தது போல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாக்களிப்பார்கள் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். குஜராத்தில் பாஜவிடம் தோல்வியடைந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ படுதோல்வி அடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் பாஜவுக்கு ஆதரவு மாறுபட்டு இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: தேசிய அளவில் பாஜ தனது பலத்தை அதிகரித்துள்ளதோடு, தமிழகத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ 4 எம்எல்ஏ சீட்களில் வென்றிருக்கிறது. அதோடு, ஆளும் திமுகவை பாஜ மாநில பிரிவு பல்வேறு பிரச்னைகளில் தாக்கி வருகிறது. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் அமைப்பாக பாஜ உருவெடுக்கச் செய்யும் முயற்சிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தெளிவாகக் கூறுகிறேன். நாமோ, தமிழக மக்களோ பாஜவை தமிழகத்தில் முதன்மை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை. 2001 மாநில சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தோளில் சவாரி செய்த அக்கட்சி 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, 2021ல் மீண்டும் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜவின் பலம் இதுதான். அவர்கள் தனித்து நின்றால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவை கட்டுப்படுத்தி வளர பாஜ முயற்சிக்கிறது. இது ஒரு பலவீனமான உத்தி மட்டுமல்ல, அது தவறான ஒன்றாகும். தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது.

கேள்வி: தேசத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறி பல பிரச்னைகளை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். இதுபோன்ற பிரச்னைகள் குறித்து பாஜ அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளீர்கள். அத்தகைய உங்கள் முயற்சிகளின் தாக்கம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு தேசிய தலைவராக வருவதற்கான வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: கலைஞர் சொன்னதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், ”எனது உயரத்தை நான் அறிவேன்”. எனது பலம் மற்றும் வரம்புகள் இரண்டையும் நான் நன்கு அறிவேன். அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான முயற்சியை திமுக ஏற்கனவே எடுத்துள்ளது. அதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் பல நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு மாறாக உள்ளன. மாநில அரசுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை அவர்கள் அபகரிக்க முயல்கிறார்கள். மேலும் மாநில அரசுகளுக்கு அதிகாரப்பட்டியலில் உள்ள விஷங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று கருதுகிறது. குறிப்பாக, பாஜ அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் இணையான ஆட்சியை நடத்த பாஜ முயற்சிக்கிறது. திமுக மட்டுமல்ல, கேரளாவில் சிபிஐஎம், தெலங்கானாவில் பிஆர்எஸ், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. பாஜவின் கூட்டணிக் கட்சியான புதுச்சேரி முதல்வரும், ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக தனது வேதனையை வெளிப்படுத்துகிறார். இந்தியாவில் பாஜ உருவாக்கிய அரசியலமைப்பு குழப்பம் இது. சமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மைக்கான திமுகவின் குரல் இப்போது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

கேள்வி: பாஜ அல்லாத சில மாநிலங்களில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது அரசின் திறமையான செயல்பாட்டை பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா, மாநிலத்தால் இயற்றப்பட்ட சில முக்கியமான சட்டங்கள் ஆளுநரால் அனுமதிக்கப்படவில்லை, தற்போதைய ஆளுநருக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்?
பதில்: அரசியலமைப்புச் சட்டத்தை படிக்கும் பழக்கம் உள்ள ஆளுநர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் சுமுகமான உறவைப் பேணுவார்கள். ஆனால், ‘நியமிக்கப்பட்ட’ ஆளுநர்களின் நடத்தையும் அணுகுமுறையும் ‘முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட’ அரசுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பது நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்குகிறது. இது தேர்தலில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமைகளை அவமதிப்பதற்கு ஒப்பானது. இது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை மற்ற மாநிலங்களுக்கு தரக்குறைவாக காட்டுவதற்கான முயற்சியாகும். மாநில சட்டப் பேரவைகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் பெறாமல் முடக்கப்பட்டால், அவை அரசியல் சாசனத்தை செயலிழக்கச் செய்கின்றன என்று அர்த்தம். மக்களின் விருப்பம் மதிக்கப்படாத இந்த போக்கு ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசமானது. ஆளுநர்கள் அரசியல் விளையாட்டுகளை விளையாடுவது ஒன்றியத்தின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி இயல்புக்கு நல்லதல்ல. இதை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 2001 மாநில சட்டப் பேரவை தேர்தலில் திமுகவின் தோளில் சவாரி செய்த அக்கட்சி 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, 2021ல் மீண்டும் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது.