உலகின் முதல் செயற்கை கருவறை : ஆண்டுக்கு 30,000 குழந்தைகள்… வியக்க வைக்கும் அறிவியல் ஆச்சரியம்?

கடந்த சில நாட்களாக பலரும் பேசிவரும் ஒரு விஷயம். புரியாத ஆங்கில வார்த்தை, தெரியாத அறிவியல் அதிசயம் இந்த Ectolife.

இதை உலகின் முதல் செயற்கை கருவறை அல்லது கருப்பை திட்டம் என அறிவியல் கூறுகிறது. இது சாத்தியமானால் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் இதன் மூலம் பிறக்கும்.

அந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் வராது, மாற்றுதிறனாளிகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு!

எப்படி சாத்தியம் இந்த அறிவியல் ஆச்சரியம்? இந்த கட்டுரையில் காணலாம்.

உலகிலேயே மிகப் பாதுகாப்பான இடம், நிம்மதியான இடம் எது என்று கேட்டால் எல்லோரும் சொல்லுவது, தாயின் கருவறை.

 

எல்லாமே செயற்கைமயமாகிவிட்ட உலகத்தில், ஒரு புதிய மனிதனை உருவாக்குவது மட்டும் ஏன் அறிவியலால் சாத்தியப்படாது என்ற கேள்விக்கு பதிலாக இந்த செயற்கை கருவறை வந்திருக்கிறது எனலாம்.

ஏற்கெனவே க்ளோனிங் என்ற ஒன்று செயல்பாட்டில் இருந்துவரும் வேளையில், இந்த க்ளோனிங் முறை மூலம் மனிதர்களை உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அப்படியே அது சாத்தியப்பட்டாலும், மரபணு ரீதியாக ஒரு மனிதனின் நகல் ஆகத்தான் இன்னொரு மனிதனை படைக்க முடியும். புதிய மனிதனை அல்ல…

அந்த வகையில் வேறுபடுகிறது இந்த எக்டோலைஃப் என்ற செயற்கை கருப்பை முறை.

எக்டோலைஃப் மூலம் குழந்தை உருவாக்கப்படும் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

படங்களில் நாம் பார்க்கும் கிராஃபிக் காட்சிகளை போல இருந்தாலும், எக்டோலைஃப் சாத்தியப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒரு ஓபன் கருவறை! கரு உருவான முதல் நாளிலிருந்து, ஒரு குழந்தை முழுமையாக வளருவதை கண்ணார பார்க்கலாம்.

எக்டோலைஃப் செயற்கை கருவறை முறை பெர்லினை சேர்ந்த ஹசீம் அல் கைலி என்பவரின் சிந்தனை!

ஹசீம் அல் கைலி ஒரு திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், அறிவியலாளர் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலாளர்.

கிட்ட தட்ட 50 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவாக தோன்றியது இந்த செயற்கை கருப்பை.

எக்டோலைஃப் மூலம் குழந்தைகளை உருவாக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தாயின் கருவறைக்குள் குழந்தை வளருவதற்கு எப்படியான சூழல் இருக்குமோ, அதே போன்ற சூழல் இங்கும் இருக்கும்.

ஆனால், கருவுற்ற தருணத்திலிருந்து, குழந்தை வளரும் ஒவ்வொரு நொடியையும், தன் கற்பனையில் மட்டுமே எண்ணிப் பார்த்துக்கொண்டு, பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் அந்த ஏக்கம் நிறைந்த நாட்கள் இனி அம்மாக்களுக்கு இருக்குமா என்றால், பதில் இல்லை தான்.

கரு வளருவதை பெற்றோர் Artificial Intelligence மூலம் கண்காணிக்கலாம். குழந்தையை சுற்றி 360 டிகிரி வயர்லெஸ் கேமரா பொறுத்தப்பட்டிருக்கும். அதன் மூலம், குழந்தை பார்ப்பதை, கேட்பவற்றை, குழந்தையின் பார்வையிலிருந்து பெற்றோர் அனுபவிக்கலாம்.

குழந்தை வளர்வதில் அசாதாரணமாக ஏதாவது தென்பட்டாலும், அதனை கண்டறிந்துவிடலாம்.

இந்த செயற்கை கருப்பையில் பொறுத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் குழந்தையின் இதயத்துடிப்பு, உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.

மரபணு மாற்றங்களை கூட இந்த செயற்கை கருப்பை வசதி மூலம் செய்துகொள்ளலாம். குழந்தையின் நிறம், கண்ணின் நிறம், தலைமுடியின் நிறம் அளவு என எல்லாவற்றையும் பெற்றோர் முடிவு செய்யலாம்.

அப்படி சாத்தியபடும் பட்சத்தில், பிறக்கும் குழந்தைக்கு, ஜெனிட்டிக்காக வரும் நோய்நொடிகள், உடல் கோளாறுகள் வரும் வாய்ப்புகள் குறைவே.

குழந்தை வளர்ச்சியை பெற்றோர் ஒரு மொபைல் செயலி மூலமாகவும் டிராக் செய்து கொள்ளலாம். குழந்தையின் ஒவ்வொவொரு அசைவையும், லைவாகவும், டைம் லாப்ஸ் வீடியோவாகவும் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும், இந்த ஆப் மூலம் குழந்தை என்ன பாட்டு கேட்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கலாம். பெற்றொர் தாங்கள் பேசுவதை, அல்லது பாட்டுப்பாடுவதை குழந்தைக் கேட்கவேண்டும் என நினைத்தாலும், இந்த செயலி மூலம் கேட்கவைக்கலாம்.

இது குறித்து பேசிய அறிவியலாளர் ஹசீம், இந்த கான்சப்ட் நடைமுறைக்கு வருமாயின், குழந்தையின்றி இருக்கும் தம்பதிகள், குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த குழந்தைக்கு அவர்களே பயாலாஜிக்கல் பெற்றோராகவும் இருப்பார்கள்” என்றார்.

மேலும் அந்த மாதிரி வீடியோவில் கூறப்படுவது, கண்டிப்பாக குழந்தை லேபில் தான் வளரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதாவது, தங்கள் குழந்தை வளரும் கருப்பையை (பாட்) வீட்டில் தங்களருகிலேயே வைத்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

இந்த புதிய அறிவியல் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?