கோவையில் விடிய விடிய இடி,மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது. நேற்று காலை கோவையில் கடும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் காட்சியளித்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நள்ளிரவில் கோவை மாநகரில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மாநர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால், முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மழைக்கு ஆங்காங்கே தாழ்வான இடங்களிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் ஒருவார காலமாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று இரவும் மேட்டுப்பாளையம், சிறுமுகை, சோலம்பாளையம், காரமடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையால் அணைகள், ஆறுகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. திடீர் மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- சின்கோனா-65, வால்பாறை பி.ஏ.பி-49, வால்பாறை தாலுகா-47, சோலையார்-37, சின்னக்கல்லார்-37, பொள்ளாச்சி-21, கோவை தெற்கு-17, விமான நிலையம்-18, பெரியநாயக்கன் பாளையம்-18.