தாளவாடியில் விநாயகர் சிலை ஊர்வலம்… பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைப்பு ..!

சத்தியமங்கலம் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி, அண்ணாநகர், தொட்டகாஜனூர், ஓசூர், ராமாபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் வைத்து அலங்கரிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதைத்தொடர்ந்து தாளவாடி பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் பேசினர். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் தலமலை சாலை வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பள்ளத்தில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.