சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் தீ விபத்து – 7 ஆடுகள் பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்தவர் கிட்டான் (65). கூலித்தொழிலாளியான இவர் ஏழு வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்து காரணமாக கொட்டகையில் இருந்த ஏழு ஆடுகள் தீயில் சிக்கி  உடல் கருகி உயிரிழந்தன. மேலும் அப்பகுதியில் இருந்த மாட்டுவண்டி மற்றும் வைக்கோல்  தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து கிட்டான் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த தகவல் அறிந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ நேற்று காலை அப்பகுதிக்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது ஒன்றிய கவுன்சிலர் பற்குணன், மாவட்ட பிரதிநிதி ஆறுச்சாமி,  வார்டு உறுப்பினர் பழனிச்சாமி, மூர்த்தி, சுப்புரவி, வெங்கடேஸ்வரமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..