கடம்பூர் மலைப்பகுதியில் இடி தாக்கி பட்டதாரி வாலிபர் பரிதாப பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கெம்பநாயக்கனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் மூர்த்தி (25). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் வீட்டில இருந்து கொண்டு மாடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூர்த்தி தனது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மூர்த்தி அப்பகுதியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பலத்த இடி மூர்த்தி நின்றிருந்த மரத்தின் மீது தாக்கியதில் திடீரென மூர்த்தி சத்தம் போட்டபடி மயங்கி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கம் இருந்த கிராம மக்கள் சென்று பார்த்த போது மூர்த்தி மரத்தின் அடியில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தின் அடியில் இறந்து கிடந்த மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடி தாக்கி வாலிபர் பலியான சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.