சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர்  தேடிப் பார்த்தபோது அங்கிருந்த ஓடையின் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்..